ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் திட்டம் அறிவிப்பு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வியை உறுதிபடுத்தியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு தேசிய மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் தெரிவித்ததாவது,
"மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று பொய் வாக்குறுதிகளை அறிவித்து, கடந்த ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் கார்பிரேட்களுக்கு வழங்கப்பட்டது.
ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி சாத்தியமில்லை என்று நான் கூறினேன். நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு நாங்கள் ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்குவோம். நாட்டில் உள்ள 25 கோடி மக்களை அந்த திட்டம் வறுமையில் இருந்து வெளியேற்றும்.
ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்படும் என்று தெரிவித்தால், அதற்கு நான் உண்மையாக இருப்பேன். பொய் சொல்வதற்கு நான் மோடி அல்ல.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தின் அறிவிப்பு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது முகத்தை பார்த்தீர்களா இன்று? அதில் நான் பயத்தை பார்த்தேன். தேர்தலில் மோடி அரசு காங்கிரஸிடம் தோல்வியடையபோகிறது" என்றார்.