நீரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு: லண்டன் நீதிமன்றத்தில் 29-இல் விசாரணை

லண்டனில் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமீன் கோரி, அவரது சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மார்ச் 29-இல் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அவர் நீதிமன்றத்தில
நீரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு: லண்டன் நீதிமன்றத்தில் 29-இல் விசாரணை

லண்டனில் கைதாகி, சிறையிலடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமீன் கோரி, அவரது சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மார்ச் 29-இல் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக அந்நாட்டின் தி டெலிகிராப் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில், லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் நீரவ் மோடி வசித்து வருகிறார்; புதிதாக வைர வியாபாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், நீரவ் மோடியின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.
இதனிடையே, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. அதையடுத்து, அவரை  ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுடன், நீரவ் மோடிக்கு ஜாமீன் கோரி, நீதிபதி மேரி மேலோன் முன்னிலையில் அவரது வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து ஆஜராகாததால், நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, நீரவ் மோடிக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com