
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை அதற்கு முன்னர் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும். பாஜக இந்த திரைப்படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதையடுத்து, இந்த விவகாரத்தில் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர்கள், இந்த திரைப்படத்தை விளம்பரம் செய்த பத்திரிகை நிறுவனங்கள் ஆகியோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில், திரைப்பட வெளியீட்டை ஒத்தி வைப்பது குறித்து பதிலளிக்குமாறு திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராக பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், 23 மொழிகளில் நாடு முழுவதும் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தி இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கிய இந்த திரைப்படத்தை சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் உள்ளிட்டோர் தயாரித்தனர்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.