யாருக்கு வாக்களித்து பிரதமராக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர் என்று மீரட்டில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஒரு பக்கம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பலமான காவலர்கள், மற்றொரு பக்கம் கரைபடிந்த கூட்டம் நிற்கிறது. இந்த தேர்தலே பலத்துக்கும், பலவீனத்துக்கும் நடைபெறும் போட்டியாகும்.
நிலம், விண்வெளி, வானம் என அனைத்து இடங்களிலும், எனது தலைமையிலான அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் என்பது ஒரு நிலையான, உறுதியான அரசுக்கும், நிலையற்ற மற்றொரு பிரிவினருக்கும் இடையேநடக்கும் போட்டியாகும்.
குறைந்தபட்ச ஊதியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் காங்கிரஸின் திட்டமே கேலிக்கூத்தாகும். முந்தைய ஆட்சி காலத்தில் ஏழை மக்கள் வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட காங்கிரஸ் எந்த திட்டத்தையும் ஏற்படுத்தவில்லை என்று மோடி குற்றம்சாட்டினார்.