லக்னௌ: வாராணசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுயேச்சை வேட்பாளராக அறிமுகமாகி, பிறகு சமாஜ்வாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜ் பகதூர், ஏற்கனவே எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் உணவு குறித்து விடியோவில் புகார் கூறியதால், கடந்த 2017ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டவர்தான்.
வேட்பு மனு நிராகரிப்பு குறித்து அவரது வழக்குரைஞர் கூறுகையில், எங்களிடம் தேவையான ஆவணங்களைக் கேட்டனர். அனைத்தையும் நாங்கள் அளித்தோம். ஆனாலும் வேட்பு மனு தகுதியானது அல்ல என்று நிராகரித்துவிட்டனர். நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்தார்.
மோடிக்கு எதிராகக் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே வாராணசி தொகுதியில் இவர் சுயேச்சையாகக் களமிறங்கினார். பிரசாரத்தின் போது பேசிய யாதவ், நான்தான் உண்மையான காவலாளி. நமது விவசாயிகளுக்காவும், வீரர்களுக்காவும் நான் போராடுவேன் என்று கூறியிருந்தார்.