இமயமலையில் இருப்பதாகக் கூறப்படும் பனிமனிதனின் காலடித் தடத்தை கண்டதாக, சில தடங்களின் புகைப்படத்தை ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த புகைப்படத்தை பனிமனிதன் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்களுக்கு அனுப்ப ராணுவம் முடிவு செய்துள்ளது.
எட்டி என்ற இனத்தை சேர்ந்த பனிமனிதன் இமயமலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இந்த பனிமனிதன் சாதாரண மனிதர்களை விட உயரமாகவும், அளவில் பெரியதாகவும் இருப்பான் என்று கூறப்படுகிறது. இமயமலை, சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்த பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாள மக்களும் பனிமனிதன் இருப்பதை நம்புகின்றனர். இந்நிலையில், நேபாளத்தின் மகாலு அடிவார முகாம் பகுதியில் பனிமனிதனின் காலடித் தடங்களை கண்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராணுவத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ராணுவ தளபதி மனோஜ் ஜோஷி தலைமையில் ராணுவத்தின் மலை ஏறும் குழுவினர் 18 பேர், நேபாளத்தில் உள்ள மகாலு மலைத்தொடரில் ஏப்ரல் 2-ஆம் தேதி மலை ஏறத் தொடங்கினர். மகாலு அடிவார முகாமுக்கு அருகில் முதல்முறையாக பனிமனிதனின் கால் தடங்களை அவர்கள் ஏப்ரல் 9-ஆம் தேதி கண்டனர். இந்த தடங்களை புகைப்படம் எடுத்து அவர்கள் அனுப்பியுள்ளனர். அதை நிபுணர் குழுவுக்கு அனுப்பி இது குறித்து மேலும் தகவல்களை கண்டறியவுள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக, மகாலு-பரூன் தேசிய பூங்காவில் பனிமனிதன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.