காங்கிரஸ் கட்சியின் மரபணுவிலேயே பொய்கள் கலந்திருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லகிம்பூர் கேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மரபணுவிலேயே பொய்கள் கலந்துள்ளன. நீதி அளிப்போம் என்று காங்கிரஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், நாட்டு மக்களுக்கு எப்போதும் அநீதி செய்துள்ள காங்கிரஸார், எப்படி தற்போது மட்டும் நீதி அளிப்பார்கள்?
மத்தியில் 55 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ் செய்த பணிகளை, 5 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பாஜக அரசு செய்துள்ளது. அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் 17 ஆண்டுகாலம் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் அரசு செய்த பணிகளை 2 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது. இதன்மூலம் பிற கட்சிகளைக் காட்டிலும் பாஜக சிறந்த கட்சி என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் அரசுகள் ஆட்சியிலிருந்தபோது, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை தலைகளை துண்டித்து பாகிஸ்தான் படையினர் கொலை செய்தனர். ஆனால் தற்போது பாஜக அரசின் ஆட்சியில், எல்லையில் இந்திய ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டால், பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
பாஜக அரசில் இடைத்தரகர் முறை முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டது. நலத்திட்டங்களுக்கு நிதி எதுவும் ஒதுக்கப்பட்டால், பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசால் அத்தொகை டெபாசிட் செய்யப்படுகிறது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.