மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி எனுமிடத்தில் ஜாம்போர்கேதா மற்றும் லேந்தாரி இடையிலான சாலைப் பகுதியில் போலீஸார் சென்ற வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்ட்கள், புதன்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 15 போலீஸார் மற்றும் அந்த வாகன ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக மஹாராஷ்டிர அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் வீர வணக்கம் செலுத்த கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் உயிர் தியாகம் என்றைக்கும் மறக்க முடியாதது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற வன்முறையாளர்கள் நிச்சயம் தப்பிக்க முடியாது என்றார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மஹாராஷ்டிர மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஹாராஷ்டிர முதல்வருடன் பேசியிருப்பதகாவும் கூறினார். மேலும், மாவோயிஸ்ட்களின் இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.