நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
மே மாதம் 3வது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3ம் தேதிதான் நிறைவடைந்த நிலையில், ஒரு மாத காலத்துக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வசதியாக முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகியிருப்பது மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால், மே 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கலைக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்பட்டது.
எனவே சிபிஎஸ்இ மாணவ, மாணவிகளும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக கையாள வசதியாக, முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.