புது தில்லி: சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எதிராக எத்தனையோ தாக்குதல்களும், மாவோயிஸ்டு, பயங்கரவாதிகள் மோதல் நடந்தாலும் கூட, இன்னபிற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாரடைப்பு, மன அழுத்தம் மற்றும் கொசுக்கடியால் உருவாகும் மலேரியா போன்ற நோய்களால் உயிரிழக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை, தாக்குதல் மற்றும் மோதலால் நிகழும் உயிரிழப்புகளை விட 15 மடங்கு அதிகமாக இருக்கிறது.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 2016 ஜனவரி 1ம் தேதி முதல் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பு, தற்கொலை, மலேரியா அல்லது கொசுவால் பரவும் இதர நோய்கள் பாதித்து உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 1,294 ஆக உள்ளது. இதுவே இதே காலக்கட்டத்தில் நடந்த மோதல் மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தற்போது இடதுசாரி பயங்கரவாத அமைப்பு மற்றும் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் நாடு முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபடும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களது உடல் மற்றும் மன நலனுக்கும் முக்கியத்துவம் தந்தால் பல சிஆர்பிஎஃப் வீரர்களின் இன்னுயிரைக் காப்பாற்ற முடியும் என்பதே இந்த புள்ளி விவரங்களின் மூலம் தெரிந்து கொள்ளும் விஷயமாக உள்ளது.