சிம்டேகா (ஜார்கண்ட்): ஜனநாயகத்தில் எஜமானர்களாகிய மக்கள் சொல்வதை காங்கிரஸ் செய்யும் என்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கூண்ட்டி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவுக்கு எதிராக, காங்கிரசின் காளிச்சரண் முண்டா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சிம்டேகா என்னும் இடத்தில வியாழனன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்,. அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாத வருமானம் ரூ. 12000-த்திற்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ரூ. 72000 நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் ஐந்து கோடி குடும்பங்கள் பயன்பெறும்.
ஜனநாயகத்தில் நீங்கள்தான் எஜமானர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த விஷயத்தில் நரேந்திர மோடியோ அல்லது எந்த தலைவரானாலும் சரி, உங்கள் முதலாளி கிடையாது. என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் சொல்லுங்கள்; நாங்கள் செய்கிறோம்.
காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மகா கூட்டணியானது மக்களில் குரலை பொறுமையுடன் கேட்கும்.
நான் எங்கு எனது 'மனதின் குரல்' பற்றிப் பேச வரவில்லை. உங்களுடையதைக் கேட்க வந்திருக்கிறேன்.
ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் ஏழை மக்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும். அத்துடன் மாவட்டம் தோறும் தொழில்நுட்ப பயிலகங்களை உருவாக்கி திறமை வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க வழி செய்யும்.
நாடு முழுவதும் விவசாயிகள் சிரமப்பட்ட போது பிரதமர் அவர்களது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.ஆனால் மோடி அரசானது அவர்களுக்கு நெருக்கமான 15 - 20 தொழிலதிபர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டுகிறது.
ஆதிவாசிகளின் நிலமானது அவர்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும்.
அவசர கதியில் பாஜக அரசால் அமல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி திட்டமானது ஏழைகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.