புது தில்லி: பண மோசடி வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய மத பிரச்சாரகர் ஜாகீர் நாயக் மீது அமலாக்கத்துறை வியாழனன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மத துவேசத்தை பரப்பும் வகையில் பேசுகிறார் என்னும் குற்றச்சாட்டின் பேரில் சர்ச்சைக்குரிய மத பிரச்சாரகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது. அதே ஆண்டு ஜாகீர் நாயக் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். மலேசியாவில் அவர் நிரந்தர குடியுரிமை பெற்று உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகீர் நாயக்குக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
அதேசமயம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ், நகை வியாபாரி அப்துல் காதிர் நஜ்முதீன் சதக் என்பவர் கைது செய்யப்பட்டார்.மத வெறுப்புணர்வு விடியோக்களை பதிவு செய்து பரப்ப ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்து ஜாகீர் நாயக்குக்கு அவர் உதவினார் என குற்றம் சாட்டப்பட்டது.
ஜாகீர் நாயக்கின் பீஸ் தொலைக்காட்சியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு அப்துல் காதிர் தான் இயக்குநராக இருந்து வருகிறார்.பீஸ் தொலைக்காட்சி வழியாக ஜாகீர் பேசியதுதான் பெருவாரியான மக்களிடம் சென்று சேர்ந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது முதல் இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய மத பிரச்சாரகர் ஜாகீர் நாயக் மீது அமலாக்கத்துறை வியாழனன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி ஜாகீர் நாயக் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் ரூ.193.06 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். இதுவரை அவரின் ரூ. 50.46 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.