அமெரிக்காவில் 3 பெண்கள் உள்பட 4 இந்தியர்கள் அவர்களது வீட்டில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, காவல் துறையினர் கூறியதாவது:
அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் வசித்துவந்த சீக்கியர்கள் நால்வர், அவர்களின் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களின் வீட்டுக்குச் சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டோம். அதில், மர்மநபர்கள் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் 3 சீக்கியப் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். எனினும், இந்தப் படுகொலைக்கான காரணமும், இதைச் செய்தவர்களின் விவரங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை என்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நியூயார்க்கிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் காவல் துறையினரிடமும், அந்தக் குடும்ப உறுப்பினர்களிடமும் தொடர்பில் இருந்து வருகிறோம். இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தப் படுகொலைச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனவெறுப்பின் காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்காது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.