மானிய விலை சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளையின் விலை 28 காசுகளும், மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.6ம் உயர்த்தப்பட்டுள்ளன.
சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதுகுறித்த விவரம் வருமாறு:
தில்லியில் மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.495.86ஆக இருந்தது. விலை உயர்வுக்குப் பிறகு, ரூ.496.14ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.6 உயர்ந்து, ரூ.712.50ஆக உள்ளது. இவ்வாறு மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்த்தப்படுவது தொடர்ச்சியாக இது 3ஆவது முறையாகும்.
பொது விநியோக முறையின்கீழ் அளிக்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, மும்பையில் மண்ணெண்ணெய் விலை லிட்டர் ரூ.31.13க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2016ம் ஆண்டு மாதந்தோறும் 25 காசுகள் விலை உயர்த்துவது என்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. தில்லியில் மண்ணெண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு மண்ணெண்ணெய் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுவதில்லை.
விமான எரிபொருளின் விலை கிலோவுக்கு 2.5 சதவீதம் அல்லது ரூ.1.595 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கிலோவுக்கு ரூ.65,067ஆக உள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைவதற்கு முன்பு, மானிய எல்பிஜி விலை ரூ.414 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.82 உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் அளிக்கப்படுகின்றன. முதலில் சந்தை விலையில் பணத்தை செலுத்தினால், மானியம் மீண்டும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 12 எண்ணிக்கைக்குப் பிறகு வாங்கப்படும் உருளைகள், சந்தை விலையிலேயே
வழங்கப்படுகின்றன.