பானி புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஆந்திரத்தில் 4 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் ஒடிஸா இடையே வெள்ளிக்கிழமை கரையைக் கடக்க இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடலோர ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்கள் வழியாக பானி புயல் கடந்து செல்ல இருக்கிறது. புயல் பாதிப்பில் இருந்து மக்களையும், கால்நடைகள் உள்ளிட்ட சொத்துகளையும் காக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இதற்கு வசதியாக மாநிலத்தில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்த வேண்டும்.
ஆந்திரத்தில் ஏற்கெனவே சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டதால், அந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்துவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது என்றே கருதுகிறேன். இதன் மூலம் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் முழுவீச்சில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட முடியும் என்று அந்தக் கடிதத்தில் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.