தொடர்ந்து தவறான தகவல்களையும், பொய்களையும் கூறி, பொய்கள் நிரம்பிய ஏடிஎம் இயந்திரமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாறிவிட்டார் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி தனது குடியுரிமை குறித்து தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்ததையடுத்து, அவர் எந்த நாட்டு குடிமகன் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் வழங்கியது.
இதைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, பொய்களைத் தொடர்ந்து கூறி வருவதால், தன்னைப் பற்றிய உண்மையான தகவல்களை ராகுல் காந்தியே மறந்து விட்டார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அமைச்சர் சர்மா புதன்கிழமை வெளியிட்ட பதிவில், தொடர்ந்து பல பொய்களை கூறி வந்ததால், உண்மையென்றால் என்னவென்று ராகுல் காந்தி மறந்து விட்டார். பொய்கள் நிரம்பிய ஏடிஎம் இயந்திரமாக அவர் இப்போது மாறி விட்டார். ராகுல் காந்தியிடம் பிரிட்டன் குடியுரிமை இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அவர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், தேர்தலுக்கு ஏற்றவாறு தனது அடையாளத்தை ராகுல் மாற்றி வருகிறார்.
வருமானம், கல்வி குறித்து ஒவ்வொரு முறையும் தகவல்களை மாற்றி மாற்றி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதற்கு பிறகு அளித்த அனைத்து தகவல்கள் குறித்தும் ராகுல் விளக்கமளிக்க வேண்டும்.
நேர்மையாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து ராகுல் அவமதித்து வருகிறார். பிரதமர் மோடி குறித்து பல அவதூறு கருத்துகளை பரப்பி வரும் ராகுல் காந்தி, பொய்களின் மொத்த உருவமாக உள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து, ராகுல் என்ற பொய்யரை மக்கள் நிச்சயம் அகற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.