ஒடிஸாவில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த ஃபானி புயல், காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் ‘ஃபானி’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது.
ஒடிஸாவின் புரி, தலைநகா் புவனேசுவரம் ஆகிய நகரங்களும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், புயல் பாதிப்புகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 43 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலாகவும் அமைந்தது. தற்போது இந்த ஃபானி புயல் மேற்கு வங்கத்தை நோக்கி வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.