இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
விண்வெளித் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியதில் சிறப்பாக பங்காற்றியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள பிரான்ஸ் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான் சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் ஸீக்ளர், கிரண் குமாருக்கு விருதை வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்வில், பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ஜான்-ஈவ்-லகால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய கிரண் குமார், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018 வரை, இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் விண்வெளித் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பு மேம்படுவற்கு கிரண் குமார் முக்கியப் பங்காற்றினார் என்று இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.