எனது அரசியல் வெற்றியை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது என்று பாஜகவின் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தில்லி தொகுதியில் கடந்த சில தினங்களாக கம்பீர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை சாரதா, ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரப் பேரணியில் ஈடுபட்டார். இந்தப் பேரணியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஓம் பிரகாஷ் சர்மா, கிழக்கு தில்லி தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ் பாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியின் தொடக்கத்தில் கௌதம் கம்பீர் பேசியதாவது: நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவது, தேசத்தைப் பலப்படுத்துவது என்ற இரு பெரும் கனவுகள் எனக்கு உள்ளன. அக்கனவுகளை நிறைவேற்றவே அரசியலில் நுழைந்தேன். ஏழை மக்களுக்காக எப்போதும் உழைப்பேன். என்னை ஏழை மக்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். கிரிக்கெட் விளையாடியபோது பாகிஸ்தான் உள்பட எந்தவொரு அணிக்கும் நான் பயந்ததில்லை.
அரசியலிலும் அப்படித்தான். எனது அரசியல் வெற்றியை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது என்றார் அவர். பேரணியைத் தொடர்ந்து சாரதா, லாஜ்பாத் நகரில் உள்ள பாஜகவின் தேர்தல் அலுவலகங்களில் பொதுமக்களை அவர் சந்தித்து பேசினார்.