மோடி என்ற பெயரைக் கொண்டவர்கள் திருடர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி கடந்த 16ஆம் தேதி ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.கபாடியா, ஜூன் 7ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
கர்நாடக மாநிலம், கோலாரில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரும், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் மோடி என்று முடிகிறது. எப்படி அத்தனை திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, மோடி என்ற பெயரில் முடியும் குஜராத் எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தன்னை கொலை குற்றம்சாட்டப்பட்டவர் என்று ராகுல் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத் மாநிலம், ஆமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம் ராகுலுக்கு கடந்த புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.