ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்தவர் பிரதமர் மோடி என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மத்திய அரசின் விடா முயற்சியால் மசூத் அஸாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. மசூத் அஸாருக்கு அடைக்கலம் அளித்துவரும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச அரங்கில் இதனால் தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஹனுமான்கர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ஐ.நா.வின் முடிவு மோடியால் மசூத் அஸார் விவகாரத்தில் சாதிக்க முடிந்தது என்பதை உணர்த்துகிறது. காங்கிரஸ் கட்சியால் இதை செய்ய முடியவில்லை. அக்கட்சியால் கடந்த 50 ஆண்டுகளாக செய்ய முடியாத பல விஷயங்களை, 55 மாதங்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்து காட்டியுள்ளது என்றார்.