காங்கிரஸ், பாஜக அரசுகள் செய்த தவறுகளை சரிசெய்வதற்காக, சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கேட்டுக் கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த் நகரில் கூட்டணிக் கட்சியான சமாஜவாதியின் வேட்பாளர் அஃப்தப் அகமதுவை ஆதரித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சி செய்தபோதிலும், வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையின்மை பிரச்னைக்கு தீர்வுகாணப்படவில்லை. ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால், மத்தியில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ.6,000 உதவித்தொகைக்குப் பதிலாக, அரசுத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
மற்றொரு புறம், பாஜக தலைமையிலான மத்திய அரசு, முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுகிறது. இதனால், மக்களவைத் தேர்தலில் அக்கட்சியை மக்கள் தோற்கடிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. பாஜக ஆட்சியில் இடஒதுக்கீட்டின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை; ஊழல் பெருகிவிட்டது; பாதுகாப்புத் துறை தளவாட கொள்முதலில் கூட ஊழல் நடைபெற்றுள்ளது.
எனவே, காங்கிரஸ், பாஜக அரசுகளின் தவறுகளை சரிசெய்வதற்கு சமாஜவாதி- பகுஜன் சமாஜ் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் மாயாவதி.