காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறிய ரக துப்பாக்கிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது என்றார் அவர்.
முன்னதாக பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூர், கிர்னி ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக, எல்லை பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. 
இச்சம்பவத்துக்கு பின்னர், பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
கடந்த பிப்ரவரி 26-க்கு பிறகு இதுபோல நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com