இமயமலையில் பனிமனிதனின் காலடித் தடத்தை கண்டதாக இந்திய ராணுவத்தினர் புகைப்படம் வெளியிட்ட நிலையில், நேபாள ராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த காலடித்தடம், பனிக்கரடியுடையதாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தேவ் பாண்டே கூறியதாவது:
நேபாளத்தின் மகாலு அடிவார முகாம் அருகில் இந்திய ராணுத்தினர் கண்டது, பனிமனிதனின் காலடித்தடமாக இருக்காது. ஏதேனும் கரடியுடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
3-4 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போல விநோதமான காலடித்தடத்தை கண்டதாக, பிரான்ஸ் நாட்டின் மலைஏறும் குழுவினர் தெரிவித்தனர். உடனே அதுகுறித்து வனஉயிரின நிபுணர்களிடம் விசாரித்தோம். மகாலு பகுதி, பெரிய அளவிலான பனி கரடிகளின் இருப்பிடம்; அதனால் அந்த காலடித்தடங்கள் பனிக்கரடியுடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதேபோல, இப்போது இந்திய ராணுவத்தினர் கண்ட காலடித்தடமும் பனிக்கரடியுடையதாக இருக்கலாம் என்று கூறினார்.
முன்னதாக, நேபாளத்தின் மகாலு அடிவார முகாம் பகுதியில் பனிமனிதனின் காலடித் தடங்களை கண்டதாக ராணுவத்தின் மலை ஏறும் குழுவினர் தெரிவித்தனர். இந்த தடங்களின் புகைப்படத்தையும் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரையில் வெளியிட்டிருந்தனர்.
எட்டி என்ற இனத்தை சேர்ந்த பனிமனிதன் இமயமலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இந்த பனிமனிதர்கள் சாதாரண மனிதர்களை விட உயரமாகவும், அளவில் பெரியதாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இமயமலை, சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்த பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாள மக்களும் பனிமனிதன் இருப்பதை நம்புகின்றனர்.