புது தில்லி: தில்லி பிஜாவாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான தேவிந்தர் ஷெராவட் திங்களன்று பாஜகவில் இணைந்தார்.
சமீப நாட்களாக தங்களது கட்சி எம்.எல் .ஏக்களை பாஜகவினர் இழுக்க முயல்வதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அர்விந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தில்லி பிஜாவாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான தேவிந்தர் ஷெராவட் திங்களன்று பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில எதிர்கட்சித் தலைவரான விஜேந்தர் குப்தாவும் அப்போது உடனிருந்தார்.
கடந்த வெள்ளியன்று தில்லி காந்தி நகர் தொகுதி எம்.எல்.ஏவான அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார். எனவே தேவிந்தர் ஷெராவட் கடந்த நான்கு நாளில் பாஜகவில் இணையும் இரண்டாவது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஆகிறார்.