புணே: மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், பெண்ணின் தந்தையாலேயே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர் முகேஷ் ரான்சிங் (23). இவரும் ருக்மணி ( 19) என்ற பெண்ணும் கடந்த அக்டோபரில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு தரப்பிலும் திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் பெண்ணின் தாயார் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார்.
பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவே முகேசும், ருக்மணியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி தம்பதியரிடையே இடையே சிறிய சண்டை நடந்துள்ளது. இதனால் வருத்தமடைந்த ருக்மணி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் இரு நாட்களில் சமாதானமடைந்த ருக்மணி உடனடியாக தனது கணவர் முகேஷை அழைத்து தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். அதன்பொருட்டு முகேசும் மனைவிவீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அப்போது முகேஷுக்கும் ருக்மணியின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சகட்டமாக ருக்மணியின் தந்தை ராமா பார்தி மற்றும் மைத்துனர்கள் சுரேந்திரா, கான்சாம் சரோஜ் இருவரும் சேர்ந்து தம்பதியினரை வீட்டிற்குள் ஒரு அறையில் வைத்து அடைத்தனர்.
பின்னர் அங்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். தந்தை அறையின் வெளிக்கதவை அடைந்துள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அவர்களை மீட்டுள்ளனர்.
சுமார் 70 சதவிதகிதத்திற்கு மேல் காயம் அடைந்த ருக்மணி மருத்துவமனையில் சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். அதேசமயம் 50 சதவித தீக்காயங்களுடன் முகேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூன்று குற்றவாளிகளை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.