அரவிந்த் கேஜரிவால் மீது நடத்திய தாக்குதலுக்கு சிவ சேனா இன்று (திங்கள்கிழமை) கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த சனிக்கிழமை தேர்தல் பேரணியில் ஈடுபட்டார். அப்போது அவரை சுரேஷ் என்ற நபர் தாக்கினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு சிவ சேவனா தனது அதிகாரப்பூர்வ நாளிதழ் ஆன சாம்னாவில் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் அரசியல் மற்றும் சமூக சகிப்புத்தன்மையற்ற நிலை வளர்ந்து வருகிறது. மை மற்றும் காலணிகளை வீசுவது போன்ற செயல்கள் பிரச்னைகளுக்கு தீர்வை கொண்டுவராது. தில்லி முதல்வர் ஆன பிறகு இதுபோன்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு ஆளாகியுள்ளார்.
மூத்த அரசியல்வாதியை அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படவேண்டும்.
கேஜரிவால் அரசு கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றியுள்ளது. அதற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளது.
புது தில்லி இந்தியாவின் தலைநகரம் என்பதால், பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பதை ஏற்க கேஜரிவால் மறுக்கிறார்.
இதற்கிடையே, அவர் பிரதமர் குறித்து கனவு கண்டு, தவறான குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார். இதுபோன்ற செயல்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
கேஜரிவாலின் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இருக்கக்கூடாது.