பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர், தலித், முஸ்லிம்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருவதால் அவர்களின் வாக்குகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக மூத்த அரசியல் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார்.
"இம்முறை பாஜக வெற்றி பெற வாய்ப்பை இல்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டது. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கூட்டணி முன்னிலையில் உள்ளது. பிகார், ஜார்கண்ட் மாநிலங்களிலும் பாஜகவினரால் வெற்றி பெற இயலாது. மே 23ஆம் தேதியுடன் பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும். தேசியவாதம், தேசப் பாதுகாப்பு போன்றவற்றை ஹிந்து- முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்துவதற்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் இது அதிகமாக பாஜகவினரால் பயன்படுத்தப்படுகிறது' என்றார் அவர்.