முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிரசாரத்துக்கு தடை விதிக்கக் கோரியும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "ராஜீவ் காந்தி ஊழலில் முதலிடம் பெற்றவர் என்ற பெயருடன் தான் மரணமடைந்தார்" என்றார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் பதிலடி தந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா மற்றும் சல்மான் குர்ஷித் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் இன்று (திங்கள்கிழமை) முறையிட்டனர். இந்த கருத்துக்கு தேர்தல் ஆணையம் மோடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் சிங்வி, பிரதமரின் பிரசாரத்துக்கு உடனடி தடை கோரியுள்ளதாக தெரிவித்தார்.