முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துகள் அனைத்தும் உண்மையானவை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசிய மோடி, "உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) ஊழலில் முதன்மையானவர் என்ற பெயருடன் மறைந்தார்' என்று குற்றம்சாட்டினார். இதற்கு, "உங்கள் "கர்மா' (வினைப்பயன்) காத்திருக்கிறது' என்று ராகுல் காந்தி பதிலளித்தார். மோடியின் கருத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவதாக அவர்கள் மோடியை விமர்சித்தனர்.
இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது. 1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை மூண்டு ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதற்கு ராஜீவ் கண்டனம் தெரிவித்தாரா? இல்லவே இல்லை. பெரிய மரம் விழும்போது சில அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும் என்று கூறியவர் ராஜீவ் காந்தி.
ஃபோபர்ஸ் பீரங்கி பேர ஊழலைச் சுட்டிக்காட்டிதான் பிரதமர் தனது விமர்சனத்தை முன்வைத்தார். அதில், ராகுல், பிரியங்கா ஆகியோர் அதிர்ச்சியடைவதற்கு ஏதுமில்லை. அப்போது நடந்த ஊழல் குறித்து நாட்டு மக்கள் அனை
வருக்குமே தெரியும் என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து சுட்டுரையில் மத்திய நிதியமைச்சர் ஜேட்லி வெளியிட்டுள்ள பதிவில், "ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்துப் பேசும்போது ராகுல் காந்தி இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை.
போபர்ஸ் ஊழலில் பல உண்மைகள் முடி மறைக்கப்பட்டு பலர் காப்பாற்றப்பட்டனர் என்பது ஊரறிந்த ரகசியம்' என்று கூறியுள்ளார்.