வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் தங்களது மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

புதுதில்லி: வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் தங்களது மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மக்களவைத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தெலுங்கு தேசம் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், லோக்தாந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் மக்களவைத் தேர்தலில், ஒரு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் முதல் 3 கட்ட வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

அதைத் தொடர்ந்து வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிடக் கோரி 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை வரும் வாரத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.   

இந்நிலையில் வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் தங்களது மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

செவ்வாயன்று இந்த மனுவானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து  மனுவினை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

ஜனநாயக நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக இந்த மனுவினை தாக்கல் செய்தோம்.

நாங்கள் வைத்தது நேர்மையான வேண்டுகோள். நாங்கள் தேசத்தின் சார்பாகவே போராடுகிறோம். எங்கள் போரைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

நாங்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை மீண்டும் தொடர்பு கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த விவகாரத்தை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com