தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, மதசார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராயி விஜயன் கூறுகையில்,
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தேசிய அளவிலான அரசியல் குறித்து இருவரும் கலந்துரையாடினோம். மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே மாநில கட்சிகளின் பங்கு மத்தியில் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று கேசிஆர் தெரிவித்தார்.
தேசத்தின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை காக்கும் அரசு மத்தியில் அமையப் போகிறது. அதில் மாநில கட்சிகளின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். எனவே அதுபோன்ற மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஆதரவாகவும், முன்னுரிமை அளிக்கும் அரசுக்கு மத்தியில் நிச்சயம் ஆதரவு அளிக்கப்படும்.
பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.