நான் வகித்து வந்த உத்தரப் பிரதேச மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்டேன் என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பாலியாவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: நான் கடந்த மாதம் 13-ஆம் தேதியே எனது ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டேன். அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் கைகளிலேயே உள்ளது. எனக்கும் அரசுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. எனது கட்சியின் பெயரையும், கொடியையும் பாஜக தவறாகப் பயன்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரத்தின்போது கூட, எனது கட்சியின் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே மாநில பாஜக அரசை ஓம் பிரகாஷ்
ராஜ்பர் வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார். தனது கட்சியை வலுவிழக்கச் செய்யும் வகையில் பாஜக நடந்துகொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.