முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவருமான பண்டித மோதிலால் நேருவின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்றத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு அரசியல் தலைவர்கள் திங்கள்கிழமை மலர் மரியாதை செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் துணைப் பிரதமரும், மக்களவை நெறிகள் குழுத் தலைவருமான எல்.கே.அத்வானி, முன்னாள் மக்களவைத் தலைவர் சிவராஜ் வி.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மோதிலால் நேருவுக்கு மலர் மரியாதை செய்தனர்.
அவர்களுடன் மக்களவையின் தலைமைச் செயலர் ஸ்நேஹலதா ஸ்ரீவாஸ்தவா, மாநிலங்களவை தலைமைச் செயலர் தேஷ் தீபக் வர்மா மற்றும் இரு செயலகங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு மோதிலால் நேருக்கு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, மக்களவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மோதிலால் நேருவின் வாழ்க்கை குறித்த சிறுவிளக்கக் குறிப்பு வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற மைய அரங்கில் மோதிலால் நேருவின் திருவுருவப் படத்தை 1957, மார்ச் 30-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் திறந்துவைத்தார்.