அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 30 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் (பிஎம்எஸ்ஏ) திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
இதுகுறித்து போர்பந்தரிலுள்ள தேசிய மீனவ தொழிலாளர்கள் சங்க செயலாளர் மணீஷ் லோதாரி மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக கூறி அப்பகுதியில் ரோந்து வந்த பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் 30 மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 6 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 மீன்பிடி படகுகளும் புதிதாக வாங்கப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்புதான் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து கிளம்பி சென்றது. சர்வதேச கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை குறிவைத்து பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.