கேரள முதல்வர் பினராயி விஜயனை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். அதுகுறித்த விவரம் வெளியிடப்படவில்லை. தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பினராயி விஜயனை அவர் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தில் சந்திரசேகர் ராவ் 2 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய மனைவி, 2 பேரக் குழந்தைகளுடன் உடன் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு சந்திரசேகர் ராவ் வரவுள்ளார்.