மோடி தொகுதியில் வேட்பு மனு நிராகரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தேஜ் பகதூர் மனு

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கிய சமாஜவாதி வேட்பாளரும், எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) முன்னாள் வீரருமான தேஜ் பகதூர்
மோடி தொகுதியில் வேட்பு மனு நிராகரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தேஜ் பகதூர் மனு


உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கிய சமாஜவாதி வேட்பாளரும், எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) முன்னாள் வீரருமான தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதாக பிஎஸ்எஃப் முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். 
எனினும், அவரை தங்கள் கட்சி வேட்பாளராக சமாஜவாதி அறிவித்தது. அதையடுத்து சமாஜவாதி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, மற்றொரு வேட்புமனுவை தேஜ் பகதூர் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இரண்டு வேட்புமனுக்களிலும் உள்ள தகவல்களில் வேறுபாடு இருப்பதாகவும், லஞ்சம் அல்லது நம்பிக்கையின்மை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறியும் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக தேஜ் பகதூர் யாதவ் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். 
அதில், தேர்தல் ஆணையம், பாரபட்சத்துடனும், காரணம் இன்றியும் இந்த முடிவை எடுத்துள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்து என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
எல்லைப் பாதுகாப்பு படையில் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று விடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் தேஜ் பகதூர் யாதவ். அதையடுத்து அவர் பிஎஸ்எஃப் படையில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர், சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் பணி நீக்கம் பற்றி கூறியுள்ளதாகவும், சமாஜவாதி சார்பில் தாக்கல் செய்த வேட்புமனுவில் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல்களை அளிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 
அதற்கு தேஜ் பகதூர் தரப்பில் இருந்து விளக்கமும், ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், பணி நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பணியாளர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறி அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com