வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மகாராஷ்டிரத்தில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்துவதாக தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. முன்னதாக, ஒடிஸாவில் பானி புயல் நிவாரணப் பணிகளுக்காக தேர்தல் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில், மாநிலத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக நெறிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு அந்த மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.
அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து 48 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 29-ஆம் தேதியுடன் தேர்தல் முடிந்துவிட்டதால், வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து, மாநில மக்களின் நலன் கருதி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தளர்த்தப்படுகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது.
எனினும், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் எவரும் அமைச்சருடன் சேர்ந்து வறட்சி நிவாரணப் பணிகளுக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.