திஷ்னுபூர்: துரியோதனன் யார்? அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும் என பாஜக தலைவர் அமித்ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், அம்பாலா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில்,
தலைக்கனம், ஆணவம் ஆகியவற்றை நமது நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வரலாறும், மகாபாரதமும் இதற்கு சாட்சி. துரியோதனனும் மிகுந்த ஆணவத்துடன் இருந்தார்.
அவரைத் திருந்தச் செய்ய பகவான் கிருஷ்ணர் முயற்சி செய்தார். ஆனால் கிருஷ்ணரையே துரியோதனன் சிறைப்பிடித்தார்.
பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால், மக்களவைத் தேர்தலை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்கள் விவகாரங்களை முன்வைத்துப் போட்டியிட வேண்டும்.
நமது நாட்டு மக்கள், மிகவும் அறிவாளிகள். அவர்களை மோடியால் தவறாக வழிநடத்த முடியாது. பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்யும்போதெல்லாம், மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், தியாகிகள் பெயரில் வாக்குகள் கோருகின்றனர். அதேபோல், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்துள்ள எனது குடும்பத்தினரையும் பாஜக தலைவர்கள் அவமதிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலானது, ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டது கிடையாது. பிரதமராலும், மத்திய அரசாலும் முழுவதும் சிதறடிக்கப்பட்ட கோடிக்கணக்கான குடும்பங்களின் கனவுகள், விருப்பங்கள் தொடர்புடையது இந்த மக்களவைத் தேர்தல் என்றார் பிரியங்கா.
இந்நிலையில், பிரியங்காவின் பேச்சுக்கு மேற்குவங்க மாநிலம் திஷ்னுபூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் அதன் தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போது, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. துரியோதனன் யார்?, அர்ஜுனன் யார்? என்பது மே 23 ஆம் தேதி நமக்கு தெரிந்துவிடும் என பதிலளித்துள்ள அமித்ஷா, ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.