நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 5 பேரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
நைஜீரியாவுக்கு சென்றிருந்த இந்திய கப்பலை கடற்கொள்ளையர்கள் 10 நாள்களுக்கு முன்பாக கடத்தியுள்ளனர். கப்பலில் இருந்த மாலுமிகளையும் அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடம் கடத்திச் செல்லப்பட்ட மாலுமிகளில் ஒருவரின் மனைவி புகார் அளித்திருந்தார். அதையடுத்து மாலுமிகள் கடத்திச் செல்லப்பட்டதை உறுதிசெய்த சுஷ்மா, அவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்ட பதிவில், இந்திய மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் கடத்தி விட்டதாக வெளியான செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறித்தப்பட்டுள்ளனர்.
நைஜீரிய அரசுடன் உடனடியாக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு உயர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்த முழு தகவல்களையும் அறிக்கையாக உடனடியாக அனுப்புமாறு நைஜீரியாவுக்கான இந்திய தூதர் அபய் தாக்குருக்கு சுஷ்மா உத்தரவிட்டுள்ளார்.