கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று இந்த முறை பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது கடினம் என்று சிவசேனை கட்சி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, மத்தியில் பாஜக ஆட்சியமைப்பதற்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை நிச்சயம் இருக்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்திருந்தார்.
இப்போது அதே கருத்தை சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்தும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மத்தியில் ஆட்சியமைப்பது குறித்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியது மிகச்சரியான ஒன்று. அவரது கருத்து வரவேற்கத்தக்கது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியமைக்கும்.
பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக இருக்கும். எனினும், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று இந்த முறை 260-280 தொகுதிகள் வரை வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது கடினம்.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும். நரேந்திர மோடி, மீண்டும் பிரதமரானால் சிவசேனை மிக்க மகிழ்ச்சியடையும் என்று கூறினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவசேனை கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் மற்றும் மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியில் சிவசேனை இடம் பெற்றுள்ளது.