மேற்கு வங்கத்தில் புதன்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் இணைந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், மம்தாவுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு மேற்கு வங்கத்துக்கு புதன்கிழமை காலை செல்கிறார். ஜார்கிராம், ஹால்டியா ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மம்தாவுடன் இணைந்து திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொள்வார்.
புதன்கிழமை இரவு ஹால்டியாவில் தங்கும் சந்திரபாபு நாயுடு, மீண்டும் வியாழக்கிழமை காரக்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பின்னர் அங்கிருந்து மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் கொல்கத்தாவுக்கு திரும்பி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் மேற்கு வங்கத்தில் மம்தா நடத்திய மகா கூட்டணிக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் கொல்கத்தா காவல் துறை தலைவரிடம் சிபிஐ விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மம்தா நடத்திய தர்னாவின்போது சந்திரபாபு நேரில் ஆதரவு தெரிவித்தார். அதேபோல, விசாகப்பட்டினத்தில் சந்திரபாபு நடத்திய அரசியல் பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.