அமெரிக்க நிறுவனங்கள் சந்தித்து வரும் வர்த்தகத் தடைகளை இந்தியா முழுவதுமாக நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வில்பர் ராஸ், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள், விவசாயப் பொருள்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா அதிகளவில் வரி விதித்து வருகிறது. மேலும், இந்தியாவில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவிலான தடைகளை எதிர்கொண்டு வருகின்றன. மற்ற நாடுகளை விட இந்தியா அதிக அளவில் இறக்குமதி வரி விதித்து வருகிறது.
விவசாயப் பொருள்களுக்கு 113.5 சதவீத இறக்குமதி வரியையும், சில பொருள்களுக்கு 300 சதவீத இறக்குமதி வரியையும் இந்தியா விதித்து வருகிறது. இவை தவிர, மின்னணு சாதன நிறுவனங்கள், மருத்துவ உபகரண நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
அமெரிக்க நிறுவனங்கள் சந்தித்து வரும் வர்த்தகத் தடைகளை இந்தியா முழுவதுமாக நீக்க வேண்டும். முக்கியமாக, தகவல்களை உள்நாட்டிலேயே சேமித்து வைக்க நிறுவனங்களை இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், இது நிறுவனங்களின் செலவை பெருமளவில் அதிகரிக்கும். எனவே, அந்த முயற்சியையும் இந்தியா கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.