வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் 2020-ஆம் நிதியாண்டு பட்ஜெட்டுக்கான நாடாளுமன்ற குழுவிடம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் அகோஸ்டா கூறியதாவது:
வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்கா வருவதற்கான ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
அவ்வாறு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை, அமெரிக்கப் பணியாளர்களின் பணித் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்.
எனினும், விசா கட்டணங்களில் எவ்வளவு தொகை உயர்த்தப்படும் என அவர் தெரிவிக்கவில்லை. அமெரிக்க நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த பணிகளுக்காக, வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை அமர்த்துவதற்கு ஹெச்-1பி விசா பயன்படுத்தப்படுகிறது.
குடியேற்றமல்லாமல், அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக மட்டும் அளிக்கப்படும் அந்த விசாவை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பெருவாரியாகப் பயன்படுத்தி வருகின்றன.
அந்த விசாவுக்கான கட்டணம் அதிகரித்தால், அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இத்தகைய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அது பொருளாதாரச் சுமையை அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.