திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிலக்கரி மாஃபியாக்கள் என்று நிரூபிக்கத் தவறினால் பிரதமர் மோடி தோப்புக்கரணம் போடத் தயாரா? என்று மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "சட்டவிரோத திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். அதேசமயம், ஊழியர்களுக்கு தங்களது கூலி கிடைப்பதில்லை" என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, அதே மக்களவைத் தொகுதியில் 2 மணி நேரத்துக்கு பிறகு தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, "சட்டவிரோத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக யாரேனும் ஒருவரை காண்பிக்கப்பட்டும். மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணமூல் வேட்பாளர்களை திரும்பப் பெறுகிறேன்.
அதேசமயம், நீங்கள் (பிரதமர் மோடி) பேசியது பொய் என்றால், 100 தோப்புக்கரணம் போட வேண்டும்.
நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகள் மத்திய அரசின் கீழ் செயல்படும் நிலக்கரித் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளில் பாஜகவினர் தான் ஈடுபடுகின்றனர். பசு கடத்தலில் ஈடுபடும் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த தகவல்கள் ஒரு பென் டிரைவில் உள்ளது" என்றார்.
அதே பங்குரா பிரசாரத்தில் பிரதமர் மோடி, "மம்தா பானர்ஜிக்கு என்னை அறைய வேண்டும் என்று தகவல்கள் வருகிறது. நான் உங்களை மதிக்கிறேன். உங்களை மூத்த சகோதரி என்றே அழைக்கிறேன். அதனால், உங்களது அறை கூட எனக்கு ஆசிர்வாதம் தான்" என்றும் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மம்தா பானர்ஜி, "நான் அவரை (பிரதமர் மோடி) அறையப் போகிறேன் என்று பேசுகிறார். ஜனநாயகத்தின் அறையை பற்றி தான் பேசினேன். முதலில் மொழியை புரிந்துக்கொள்ளவேண்டும். நான் ஏன் உங்களை அறைய வேண்டும்? நான் அந்த மாதிரியான நபர் அல்ல. நான் ஜனநாயகத்தை புரிந்துகொண்டுள்ளேன். தங்களது வாக்குகள் மூலம் மக்கள் தருவது தான் ஜனநாயக அறை" என்றார்.