புது தில்லி: தில்லி கிழக்கு தொகுதி பெண் வேட்பாளர் மீது தான் அவதூறு பிரசாரம் செய்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா என்று தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவாலுக்கு, பாஜகவின் கவுதம் காம்பீர் சவால் விடுத்துள்ளார்.
தில்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் அதிஷி போட்டியிடுகிறார்.
தற்போது அதிஷிக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கவுதம் காம்பீர் தில்லி கிழக்கு தொகுதியில் வாக்களர்களிடம் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி கண்ணீர் விட்டு அழுதவாறே கூறியதாவது:
என் மீதான தனிப்பட்ட முறையிலான தாக்குதலுக்காக பாஜகவால் இந்த துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காம்பீர் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
தேர்தலுக்காக அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்பதைக் காட்டியுள்ளார்கள். அந்த பிரசுரத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மிகவும் மோசமாக உள்ளது, இதனை படிக்கும் யாராக இருந்தாலும் அவமானம் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தில்லி கிழக்கு தொகுதி பெண் வேட்பாளர் மீது தான் அவதூறு பிரசாரம் செய்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா என்று தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவாலுக்கு, பாஜகவின் கவுதம் காம்பீர் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அர்விந்த் கேஜரிவால் மற்றும் அதிஷிக்கு எனது சவால். நான்தான் இதைச் செய்தேன் என்பதை நீங்கள் நிரூபித்தால், நான் உடனே எனது வேட்பு மனுவினை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். இல்லை என்றால், நீங்கள் அரசியலிலிருந்து விலகி விடுவீர்களா?
பெண்களை அவமானபப்டுத்தும் உங்கள் செய்கையின் மீது நான் வெறுப்புக் கொள்கிறேன் கேஜரிவால், அதுவும் உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மீதே! இவை எல்லாமும் தேர்தலில் ஜெயிப்பதற்கா?
கேஜரிவாலை போன்ற ஒருவரை முதல்வராக பெற்றதற்கு நான் வெட்கப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.