பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் செல்லும் நதிகள் தடுத்து நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதன்கிழமை எச்சரித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சிந்து நதி ஒப்பந்தமே இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நல்லுணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது ஆகும். ஆனால், புல்வாமா தாக்குதலின மூலம் பாகிஸ்தான் அதை மீறிவிட்டது. இனி வரும் காலங்களிலும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வந்தால், அந்நாட்டுக்குச் செல்லும் 3 நதிகளும் தடுத்து நிறுத்தப்படும்.
மேலும் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இதன்மூலம் வழங்கக் கூடாது என்று மக்களும் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே சிந்து நதி ஒப்பந்தத்தை இனியும் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
1960-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் அயூப் கான் ஆகியோர் இந்த சிந்து நதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் கிழக்குப் பகுதி நதிகளான ரவி, பயீஸ் மற்றும் சுத்லஜ் ஆகியவற்றின் முழு உரிமையும் இந்தியாவை சேரும். மேற்குப் பகுதியில் உள்ள சிந்து, சேனாப் மற்றும் ஜேலம் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்கு தடையின்றி வழங்கப்படும். சில சட்டதிட்டங்களுக்குட்பட்டு இந்தியாவும் இந்த நதிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.