ரோஹ்தக்: சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் தொடர்பான காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைக் கருத்துக்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஹரியாணா மாநிலமும் அடங்கும். இங்கெல்லாம் வெள்ளி மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
முன்னதாக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா வியாழன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 1984-ஆம் இந்திரா காந்தி மரணத்தினைத் தொடந்து நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, 'ஆமாம், அது சாதாரணமாக நடந்து விட்டது. அதற்கு என்ன செய்வது?' என்று பதிலிளித்திருந்தார்.
இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் தொடர்பான காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் சர்ச்சைக் கருத்துக்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் ரோஹ்தக்கில் வெள்ளியன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:
வியாழனன்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகளை அது சாதாரணமாக நடந்து விட்டது என்று பேசியுள்ளார். இந்த மூன்று வார்த்தைகளே காங்கிரசின் அகந்தையினைக் காட்டுகிரது.
அந்த தலைவர் காங்கிரசின் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானாவார். ராஜிவ் காந்தியின் நல்ல நண்பர். ராகுல் காந்திக்கு குரு போன்றவர்.
நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர். எரியும் டயர்கள் அவர்களின் கழுத்தில் மாட்டப்பட்டன. ஆனால் காங்கிரஸ் இதைத்தான், 'அது சாதாரணமாக நடந்து விட்டது' என்று குறிப்பிடுகிறது.
ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் சீக்கியர்கள் குறிவைக்கப்பட்டார்கள். கலவரத்தை முன்னினின்று நடத்தியது காங்கிரஸ் தலைவர்கள். காங்கிரஸில் உள்ள ஒவ்வொரு சிறு தலைவரும் இதற்கு பொறுப்பானவர்கள். ஆனால் காங்கிரஸ் தற்போது, 'அது சாதாரணமாக நடந்து விட்டது' என்று கூறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.