புது தில்லி: எஸ்.சி / எஸ்.டி சட்டத்தில் மரண தண்டனை வழங்கும் பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பிரிவு 3, உட்பிரிவு 2 (i ) - இன் படி, எஸ்.சி / எஸ்.டி இனத்தைச் சாராத ஒருவர், எஸ்.சி / எஸ்.டி இனத்தவருக்கு எதிரான வழக்கில் தவறான அல்லது ஜோடிக்கப்பட்ட சாட்சியம் அளித்து, அதன் மூலம் அந்த எஸ்.சி / எஸ்.டி இனத்தவருக்கு உச்ச பட்ச தண்டனை கிடைக்க நேருமாயின், சாட்சியம் அளித்தவருக்கு கண்டிப்பாக மரண தண்டனை வழங்க இந்தப் பிரிவு வழி செய்கிறது.
இந்தப் பிரிவினை நீக்கக் கோரி வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கானது வெள்ளியன்று நீதிபதி பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் குறிப்பிட்ட சட்டப் பிரிவானது ஒருதலைப்பட்சமானது, பொருத்தமற்றது, நேர்மையற்றது மற்றும் கொடூரமானது; எனவே அதனை உடனே நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.