குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார்: கேஜரிவாலுக்கு எதிராக கம்பீர் ஆவேசம்
புது தில்லி: என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார் என்று தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு எதிராக கம்பீர் கருத்துத்தெரிவித்துள்ளார்.
தில்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மியின் அதிஷி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அதிஷிக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கவுதம் கம்பீர் தில்லி கிழக்கு தொகுதியில் வாக்களர்களிடம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ததாக குற்றச்ச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அதிஷி இருவரும் வியாழன் அன்று கம்பீரை கடுமையாக விமர்சித்திருந்தனர். அதேபோல் பெண் வேட்பாளர் மீது தான் அவதூறு பிரசாரம் செய்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா என்று தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவாலுக்கு, பாஜகவின் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார் என்று தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு எதிராக கம்பீர் வெள்ளியன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஒருவேளை அரவிந்த் கேஜரிவால் தனது குற்றச்சாட்டை நிரூபித்து விட்டார் என்றால் நான் பொது இடத்தில் தூக்கில் தொங்கத் தயார்; இல்லை என்றால், அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தில்லி மகளிர் ஆணையத்தில் கம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் அளித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.